தமிழ்நாடு
கொரோனா தடுப்பூசியால் குடிமகன்களுக்கு வந்த சோதனை!
![vijaya baskar (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/vijaya-baskar-1.jpg)
கொரோனா தடுப்பூசி போட்ட உடனே மதுஅருந்தக்கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘வரும் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடுவதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே வேளையில் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
முதலில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்க போடப்படும். அதன்பிறகே பொதுமக்களுக்கு போடப்படும். ஒரு நாளைக்கு 100 பேருக்கு வீதம் தடுப்பூசி போடப்படும். இது இரண்டு கட்டங்களாகும். முதல் தடுப்பூசி போட்டப் பிறகு 48 மணி நேரம் கழித்தே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கான வழிவகை ஏற்படும். அதன்பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவதாக தடுப்பூசி போடப்படும். அப்போது தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
கொரோனா தடுப்பூசியைப் பற்றி பல தவறான தகவல்கள் வதந்திகள் பரவி வருகிறது. இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் அத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம். குறிப்பாக தடுப்பூசி போட்ட உடனேயே மது அருந்தக்கூடாது. முறையான அனுமதி கிடைத்தால் நானே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.