தமிழ்நாடு
ரேஷன் பொருள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பலாம்: தமிழ்நாடு அரசு
ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொதுவாக ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்காது என்றும் குறிப்பாக சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் இனாம் பொருட்கள் மிகவும் தரமற்றதாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்ற மு க ஸ்டாலின் அவர்கள் ரேஷன் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பதும் இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால் ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை ரேஷன் கடை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தரமான பொருட்களாக இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்றும் தரமற்றதாக இருந்தால், உடனடியாக அந்த பொருட்களை திருப்பி அனுப்பலாம் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக இனி அனைத்து மக்களுக்கும் தரமான ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.