தமிழ்நாடு
சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன்: ஆளுனர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநராக சற்று முன்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.என்.ரவி, அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கண்டிப்பாக பணியாற்றுவேன். உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
என்னால் முடிந்த அளவு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும் நான் முயற்சி செய்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன்.
தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தி உள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு இன்னும் சில காலம் எனக்கு அவகாசம் தேவை இவ்வாறு ஆளுநரின் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.