தமிழ்நாடு
பறவை காய்ச்சல் எதிரொலி.. தமிழகத்தில் கேரள கோழிகளுக்கு தடை
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
‘கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு, 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில், கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், துறை செயலர் கோபால் ஆகியோர் அறிவுரையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், கேரள மாநில எல்லையோரம் அமைந்துள்ள, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும், தமிழக எல்லைக்குள் நுழையாதபடி, தடை செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.
கோழிகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். நன்கு சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதால், பறவை காய்ச்சல் நோய், மனிதர்களுக்கு வராது.இப்பறவை காய்ச்சல், மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இந்நோய் குறித்து, பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவை இல்லை’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.