சினிமா
பேசுவது தமிழ், தமிழ்,.. நடிப்பது இந்தி இந்தி: திரையுலக பிரபலங்களின் இரட்டை வேடம்!
திரை உலக பிரபலங்கள் ஒருசிலர் தமிழ் தமிழ் என்று பேசிக்கொண்டு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இந்தி மொழி படங்களில் நடிப்பதும், ஹிந்தி மொழி திரைப்படங்களைத் தயாரிப்பதுமாக இருப்பது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக ஹிந்தியில் இருந்து வந்த நாயகிகள் தான் முன்னணியில் இருக்கின்றனர் என்பதும் தமிழ் பேசும் நடிகைகளுக்கு இங்கே பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் தமிழ் தமிழ் என்று தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் திமுகவின் வாரிசான உதயநிதி, ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து தன்னை ஒரு தமிழ் ஆர்வலர் என்று தன்னைத் தானே காண்பித்துக் கொண்டிருக்கும் பா ரஞ்சித், இந்தி தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து பிர்சா முண்டா வாழ்க்கை வரலாறு படத்தை இந்தியில் இயக்குகிறார்.
அதேபோல் தன்னை தமிழ் குடும்பம் என்று சொல்லிக்கொள்ளும் சூர்யா இந்தியில் சூரரைப்போற்று படத்தை தயாரித்து வருகிறார். தமிழ் தெரியாது போடா என்ற டீசர்ட் அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய யுவன்சங்கர்ராஜா ஹிந்தியில் உருவாகிவரும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேபோல் தமிழணங்கே என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் தயாரிப்பு திரைப்படமான ’99 சாங்ஸ் என்ற படத்தை இந்தியில் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழ் திரையுலக பிரபலங்கள் ஹிந்தியில் பணிபுரிவதை யாரும் தவறாக கூறவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழ் தமிழ் என்று தமிழ் பற்றாளர்கள் போல் தங்களை காண்பித்துக் கொண்டு ஹிந்தியில் பணிபுரிவது தான் குறை சொல்கிறோம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.