தமிழ்நாடு
தாம்பரம் ரயில் நிலைய கொலை: ரயில் ஸ்நேகத்தில் தொடங்கி ரத்தக்களறியில் முடிந்த காதல்!
நேற்று பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் ஸ்வேதா தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் போது அதே ரயிலில் வந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்த ராமச்சந்திரன் என்பவரை சந்தித்து உள்ளார். இருவரும் சில நிமிடங்கள் சினேகமாக பேசியுள்ளனர்.
இந்த ரயில் ஸ்னேகம் படிப்படியாக காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் போன் செய்தால் ஸ்வேதா எடுப்பதில்லை என்று கூறப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன் நேற்று கல்லூரி முடிந்ததும் ஸ்வேதாவை சந்தித்து அவருடன் பேசிக்கொண்டு வந்தார். இந்த பேச்சுவார்த்தை தாம்பரம் ரயில் நிலையம் வரை சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து ராமச்சந்திரன் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஸ்வேதா மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ராமச்சந்திரனை பிடிக்க முயற்சித்தபோது தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார் ராமச்சந்திரன்.
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ஸ்வேதா மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஸ்வேதா மரணம் அடைந்தார். ராமச்சந்திரன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் ஆரம்பித்த காதல் திடீரென முறிவு ஏற்பட்டதால் ஸ்வேதாவை ராமச்சந்திரன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமச்சந்திரனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் பிரச்சினை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர்.