உலகம்
பத்திரிகையாளர்களை தேடித்தேடி கொலை செய்யும் தாலிபான்கள்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தாலிபான்கள் தற்போது அராஜகம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பெண் செய்தி வாசிப்பாளர்கள், பெண் செய்தியாளர்கள் ஆகியவர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய தாலிபான்கள், பெண்கள் ஊடகத் துறையில் வேலை செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனாலும் பெண்கள் கல்வி கற்பதற்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பத்திரிக்கையாளர்களை வீடு வீடாக தேடி கொலை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனி ஊடகத்தில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்தினரை சுட்டுக்கொன்ற தாலிபான்கள் மற்ற பத்திரிகையாளர்களையும் வீடுவீடாக தேடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிரை கையில் பிடித்திருக்கும் பத்திரிகையாளர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் என்பவரும் தாலிபான்களால் தான் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக ஆப்கனை அறிவிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது என்பதும் அங்கிருந்த தூதரக அதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பி விட்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தாலிபான்கள் திடீரென இந்திய தூதரகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்ததாகவும் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பயன்படுத்த வைத்திருந்த அனைத்து கார்களையும் தாலிபான்கள் எடுத்துச் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.