உலகம்
கிரிக்கெட் மைதானங்களை கைப்பற்றிய தாலிபான்கள்- ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
நாட்டில் உள்ள அத்தனைக் கிரிக்கெட் மைதானங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு எதிர்காலம் குறித்த பயமும் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெரும் கவலையில் உள்ளதை வெளிப்படையாகத் தனது ட்விட்டத் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்.
ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்புக்குரிய உலகத் தலைவர்களே, இப்போது எனது நாடு பெரும் சிக்கலில் உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தினந்தோறும் தங்களது உயிரை பலி கொடுத்து வருகிறார்கள். எங்களது உடமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். எங்களை குழப்பத்தில் விழ வைக்காதீர்கள். ஆப்கன் நாட்டு மக்கள் கொல்லப்படுவதையும் நாட்டை அழிக்கப்படுவதையும் நிறுத்துங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” என மிகுந்த ஆதங்கத்துடன் பதிவு செய்திருந்தார்.