தமிழ்நாடு

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை: தேர்தலில் போட்டியிடாதது குறித்து டி ராஜேந்தர் அறிக்கை

Published

on

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் டி ராஜேந்தர் வரும் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் தனது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள்‌ முதல்வர்‌, அம்மா காலத்திலிருந்து தொடங்கி இந்நாள்‌ துணை முதல்வர்‌, அண்ணா தி.முக.வின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ மாண்புமிகு திரு.ஓ.பி.எஸ்‌. அய்யா அவர்கள்‌ என்‌ நீண்ட நாள்‌ நண்பர்‌ ஆவார்‌.
நடைபெறும்‌ இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்‌ தொடங்குவதற்கு முன்பு மாண்புமிகு ஒ.பி.எஸ்‌ அய்யா அவர்கள்‌, என்னை அழைத்தார்‌, சென்றேன்‌. மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்‌.

கையில்‌ பூங்கொத்து ஒன்றை தந்தேன்‌
கண்ணியமாய்‌ விடைபெற்று வந்தேன்‌
மறைந்த முதல்வர்‌ அம்மா அவர்கள்‌ இல்லாமல்‌
அண்ணா தி.மு.க. சந்திக்கின்ற முதல்‌ சட்டமன்ற தேர்தல்‌ களம்‌…..
அதைப்போல்‌ மறைந்த முன்னாள்‌ முதல்வர்‌ கலைஞர்‌ அவர்கள்‌
இல்லாமல்‌ தி.மு.க சந்திக்கின்ற முதல்‌ சட்டமன்ற தேர்தல்‌ களம்‌…
இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர்‌ பலம்‌.
இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள்‌ பக்க பலம்‌.
அதைத்‌ தவிர அவர்களிடத்தில்‌ இருக்கிறது பல பலம்‌.
இரண்டு கட்சிகளுமே பார்த்துக்‌ கொள்ளப்போகிறது பலப்பரிட்சை.
இதில்‌ நான்‌ போய்‌ என்ன செய்யப்‌ போகிறேன்‌. புது சிகிச்சை.
ஒருவருடைய வாக்கு வன்மை, அவர்‌ வார்த்தையில்‌ இருக்கும்‌ தன்மை,
அதில்‌ வெளிப்படும்‌ உண்மை. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று
சில முன்னாள்‌ முதல்வர்கள்‌ நம்பினார்கள்‌. அதன்‌ அடிப்படையில்‌
என்னை தேர்தல்‌ பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள்‌. அது ஒரு காலம்‌.
கொள்கையை சொல்லி ஒட்டு கேட்டதெல்லாம்‌ அந்தக்‌ காலம்‌.
கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக்‌ கொள்ளலாம்‌ என்பது இந்தக்‌ காலம்‌.
காலமும்‌ சரியில்லை. களமும்‌ சரியில்லை கரையில்‌ ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கலாம்‌ என்று முடிவெடுத்து விட்டேன்‌.

பத்தும்‌ பத்தாதற்கு இது கொரோனா காலம்‌.
பாதுகாப்பு வேண்டுமென்றால்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌ முகமூடி.
பக்குவப்பட்டவனாய்‌ வாழ வேண்டுமென்றால்‌ அமைதி காக்க வேண்டும்‌ வாய்மூடி.

இந்த சட்டமன்ற தேர்தலில்‌ எங்கள்‌ இலட்சிய தி.மு.க நாங்கள்‌ யாரையும்‌ ஆதரிக்கவும்‌ இல்லை, அரவணைக்கவும்‌ இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்‌. நாடும்‌, நாட்டு மக்களும்‌ நல்லா இருக்க வேண்டுமென்று எல்லாம்‌ வல்ல இறைவனிடம்‌ பிரார்த்திக்கிறோம்‌.

இவ்வாறு டி ராஜேந்தர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version