தமிழ்நாடு
‘சிறையில இருந்து வத்தாச்சு சின்னம்மா… அடுத்து யாரு ஆகப்போறா CMஆ..’- எடப்பாடியாரை வம்பிழுத்த டி.ஆர்
தனக்கென ஒரு தனி ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்’ சங்கம் வைத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர். தனக்கு ஆதரவாக உள்ள தயாரிப்பாளர்களை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தமிழ்த் திரையுலகப் பிரச்சனைகளை பேசி வருபவர் டி.ஆர்.
அந்த வகையில் அவர் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தின் சினிமாக்களுக்குப் போடப்படும் உள்ளாட்சித் துறை வரி ரத்து செய்யப்பட்ட வேண்டும். மாநில ஜி.எஸ்.டி வரியில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு விலக்கு வேண்டும். வி.பி.எஃப் கட்டணம் ரத்து செய்யப்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு உள்ளன.
மனு கொடுக்கும் போது செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர், ‘சினிமா துறையில் இருந்து வந்து நாட்டை ஆண்டவர்கள் தான், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும். அவர்கள் வழியில் வந்ததாக பெருமை பேசிக் கொள்ளு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் பெயரால் ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் வந்த துறையின் கஷ்டங்களை உணர மறுக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திரைத் துறையினர் படும் கஷ்டங்கள் சுத்தமாக புரியவில்லை. அதனால் தான் நாங்கள் எத்தனை முறை கோரிக்கை மனு கொடுத்தாலும், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும் சசிகலாவின் அரசியல் வருகை குறித்துப் பேசிய டி.ஆர், ‘சிறையில் இருந்து வந்துட்டாங்க சின்னம்மா… அடுத்து யார் ஆகப்போறா சி.எம்.மா?’ என சூசக கேள்வி எழுப்பியுள்ளார்.