இந்தியா
இதற்காகத்தான் காத்திருந்தேன்: இறப்பதற்கு முன்னர் தெரிவித்த சுஷ்மா!
67 வயதான முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இறப்பதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் பதிவிட்ட டுவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதற்கான மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய பாஜக அரசு, மக்களவையிலும் நிறைவேற்றியது. குடியரசுத்தலைவரும் அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். இதனை பாஜகவினர் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஓய்வெடுத்துவந்த சுஷ்மா, நேற்று இரவு 7.30 மணியளவில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டு டுவீட் செய்தார். அதில், நன்றி பிரதமரே நன்றி… இந்த நாளுக்காகத்தான் என் வாழ்க்கையில் காத்திருந்தேன் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அவர் இப்படி பதிவிட்ட ஒருசில மணி நேரங்களிலேயே அதாவது 9.30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக சுஷ்மா சொல்ல அவரை அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் அதற்குள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.