சினிமா செய்திகள்
விஜய், தனுஷை அடுத்து சூர்யாவின் வரி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் வாங்கிய ஆடம்பர காருக்கான வரி குறைப்பு குறித்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது என்பதும் வரியை உடனடியாக கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஜய், தனுஷை அடுத்து சூர்யா தொடர்ந்த இதுபோன்ற ஒரு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 2 மதிப்பீடு ஆண்டுகளுக்கு அவர் 3.11 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டது, இந்த உத்தரவை மேல்முறையீடு தீர்ப்பாயம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீர்ப்பாயத்தில் தனது வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின் முடிவு காணப்பட்டதால் வருமான வரித்துறை ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நடிகர் சூர்யா கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விஜய் மற்றும் தனுஷ் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சோதனை கடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாகவே வருமானவரிகணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த வாதத்தை நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் வருமானவரி மீதான வட்டி விலக்கு கோரிய சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக வட்டி கட்டும் படி அவர் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.