சினிமா செய்திகள்
மின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.