தமிழ்நாடு
‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. நெறிப்பதற்காக அல்ல’- ஒன்றிய அரசை சாடும் சூர்யா
ஒன்றிய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா கொந்தளித்து உள்ளார்.
அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புதிய சட்ட திருத்த வரைவுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கூறி, ‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…’ என்று கருத்திட்டுள்ளார். மேலும் இந்தப் புதிய சட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள் என்பதால், அனைவரும் அது குறித்து அறிந்து கொண்டு கருத்து கூற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…#cinematographact2021#FreedomOfExpression
Today’s the last day, go ahead and file your objections!!https://t.co/DkSripAN0d
— Suriya Sivakumar (@Suriya_offl) July 2, 2021
புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா மூலம், இந்தியாவில் வெளியிடப்படும் ஒரு திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுத்தப் பின்னரும், ஒன்றிய அரசுக்கு படம் சொல்லும் கருத்து ஒத்துவரவில்லை என்றால், சான்றிதழைத் திரும்பப் பெற முடியும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் படைப்புச் சுதந்திரம் பறிபோகும் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யாவும் அதற்கு எதிராக பேசியுள்ளார்.