இந்தியா
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: ஒன்றிய அரசை ‘மன்னிக்கவே முடியாது’ என உச்ச நீதிமன்றம் விமர்சனம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசின் மெத்தன் போக்கான செயல்பாட்டை மன்னிக்கவே முடியாது என்று கறாராக விமர்சனம் செய்து உள்ளது உச்ச நீதிமன்றம்.
கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து சென்ற ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், தாங்கள் வேலை பார்த்து வந்த மாநிலங்களில் இருந்து எந்த வித உதவியும் இன்றி நடந்தே தங்கள் சொந்த ஊர்களை சென்றடைந்தனர். அந்த காலக்கட்டத்தில் பலர் உடல்நலக் குறைவு காரணமாகவும், பட்டினி காரணமாகவும் மரணமடைந்தார்கள். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியது.
அதன்படி, ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக செயல்படுத்தி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான உணவு கிடைக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான நலத் திட்ட உதவிகள் கிடைகுகம் வகையில் அவர்களுக்கென்று பிரத்யேன ஆன்லைன் தளம் ஒன்றையும் ஆரம்பிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது.
இது குறித்து ஒன்றிய அரசு தரப்பு போதுமான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், அதன் போக்கு மன்னிக்க முடியாத வகையில் உள்ளது என்று விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் தளம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.