தமிழ்நாடு
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் நேற்று விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
இதனை எதிர்க்கும் அப்பல்லோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அது தள்ளுபடியானதை அடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடியது அப்பல்லோ நிர்வாகம். இந்த வழக்கை காரணம் காட்டி ஆறுமுகசாமி விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்பல்லோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.