தமிழ்நாடு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் என்ற மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் இறுதியில் தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும்.