தமிழ்நாடு
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடந்து வந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆளுநருக்கு சட்ட விலக்களிப்பு அதிகாரம் உள்ளது என்பதற்காக நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்க முடியாது என்றும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உடனடியாக அவர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.