இந்தியா
ஆக்ஸிஜன், தடுப்பூசி விவகாரம்: ‘தேசிய அவசரநிலை’ என மத்திய அரசை விமர்சித்த உச்ச நீதிமன்றம்
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 2,104 பேர் இறந்துள்ளனர். இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறித்தும் அதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிமன்ற அமர்வு. அந்த அமர்வு, ‘கொரோனா தொற்றைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் சப்ளை, அடிப்படை மருந்து சப்ளை, தடுப்பூசி செலுத்தப்படப் போகும் விதம் குறித்து விளக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.