இந்தியா
பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? உச்சநீதிமன்றம் கேள்வி
பேரறிவாளனை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மோதல் போக்கில் இருக்கும் நிலையில் அவரை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பதும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு தொடர்ச்சியாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை அடுத்து பேரறிவாளனை விடுதலை செய்ய யாருக்கு உரிமை உள்ளது என மத்திய மாநில அரசுகள் மோதல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரை ஏன் நாங்கள் விடுதலை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் .
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப் போட்டியில் தேவையில்லாமல் பேரறிவாளன் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.