கிரிக்கெட்
பஞ்சாப்பை பந்தாடிய ஐதராபாத் அணி: தோற்றாலும் ஆட்டநாயகன் விருது பெற்ற தவான்!
நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து பந்தாடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து அந்த அணி 143 ரன்கள் எடுத்தது.
ஒற்றை ஆளாக போராடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக 66 பந்துகளுக்கு 99 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்தபடியாக சாம்கரண் 22 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஐதராபாத் அணியின் மயங்க் மார்கண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 17.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி 74 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பெரிதும் உதவினார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஐதராபாத் அணி இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோற்றாலும் ஒற்றை ஆளாக போராடி 99 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.