தமிழ்நாடு
ஒன்றிய அரசு விவகாரம்: ஆளுநர் தமிழிசை மீதும் நடவடிக்கை உண்டா? என சுப வீரபாண்டியன் கேள்வி!
கடந்த சில மாதங்களாக குறிப்பாக திமுக அரசு தமிழகத்தில் பதவியேற்றதிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்திலேயே ஒன்றிய அரசு என்று தான் கூறுவோம், கூறிக்கொண்டே இருப்போம் என்று உறுதிபடக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் செய்திகளில் மத்திய அரசு என குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக மத்திய அரசு என்று கூறிக்கொண்டு வந்த நிலையில் திடீரென ஒன்றிய அரசு எனக் கூறுவதும் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு தொடரப்படும் என்றும் பாஜக பிரமுகர்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்ற போது இந்திய ஒன்றியம் என்று கூறி பதவியேற்றுள்ளதை சுபவீரபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒன்றியம் என்று சொன்னால் நடவடிக்கை எடுப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது பாஜக. இந்திய ஒன்றியம் என்று கூறிப் பதவி ஏற்றுள்ளனர் புதுவை பாஜக அமைச்சர்கள். நடவடிக்கை எப்போது? ஆளுநர் தமிழிசை மீதும் நடவடிக்கை உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
#ஒன்றியம் என்று சொன்னால் நடவடிக்கை எடுப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது #பாஜக. இந்திய ஒன்றியம் என்று கூறிப் பதவி ஏற்றுள்ளனர் #புதுவை பாஜக அமைச்சர்கள். நடவடிக்கை எப்போது? ஆளுநர் #தமிழிசை மீதும் நடவடிக்கை உண்டா?
— SubaVeerapandian – belong to Dravidian stock (@Suba_Vee) June 28, 2021