தமிழ்நாடு
பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது புகார் தரலாம்: போக்குவரத்துத் துறை
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்திலும், மாலையில் முடிவடைந்த பிறகும் மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிப்பது தொடர்கதை.
பள்ளி, கல்லூரி திறக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அரசும் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுமட்டும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்ற முடிவைப் போக்குவரத்துத் துறை எடுத்துள்ளது.
இதன்மூலம் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணித்தால், பேருந்தை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அறிவுரையைக் கேட்காத மாணவர்கள் மீது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் காவல் துறை அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகாவது மாணவர்கள் பேருந்துகளிலிருந்து ஆபத்தான முறையில் கட்டுப்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.