தமிழ்நாடு
பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்: உயிரிழந்த சிறுவனின் தாய்
சென்னை ஆழ்வார் திருநகரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி இன்று காலை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என தாய் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்த சிறுவனின் தாய் ஜெனிபர் கூறியபோது ’இன்று காலை எட்டு முப்பது மணிக்கு குழந்தையை பள்ளி வாகனத்தில் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன். 8 40க்கு பள்ளியிலிருந்து அழைத்து மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர் .
மருத்துவமனை சென்று குழந்தையை பார்க்கையில் வாய் மூக்கு என உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. என்ன நடந்தது என்று பள்ளி தரப்பில் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை.
உணவு கூடையை விட்டு சென்றதாகவும் தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது. பள்ளி தாளாளர் கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்றும் தாயார் ஜெனிபர் அழுது கொண்டே கூறியுள்ளார்.
உயிரிழந்த 2ஆம் வகுப்பு படித்த மாணவன் ஜெனிபருக்கு ஒரே மகன் என்பது சோகத்துக்குரிய செய்தி ஆகும்.