இந்தியா
அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சமீபத்தில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வலுப்பெற்று 4ம் தேதி புயலாக வலுப்பெற்று வரும் ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், அந்த புயல் கரையை கடக்கும் போது குமரிக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “அந்தமானில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது; இது புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொள்ளும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 4ஆம் தேதி மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், டிசம்பர் 4ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.