தமிழ்நாடு
ஸ்டாலின் கண்ட கனவு எந்தக் காலத்திலும் நனவாகாது: எடப்பாடி பழனிசாமி அதிரடி!
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அங்கு இருப்பது நியாயமல்ல உங்களுடைய இயக்கம் உங்களின் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் தான் நான் அவர்களையும் வருக, வருக, வருக என வரவேற்க விரும்புகின்றேன் என்றார்.
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே பதிலடி கொடுத்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று சேலத்தில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு அதிமுக தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் நின்று இருபெரும் தலைவர்களின் தலைமையில் ஆட்சியும் கட்சியும் நிலைத்து நிற்க உள்மனதோடு மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறார்கள். ஸ்டாலின் கண்ட கனவு எந்தக் காலத்திலும் நனவாகாது என ஸ்டாலினின் அழைப்புக்கு பதிலளித்தார்.