தமிழ்நாடு
சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்கி பழிவாங்க துடிக்கும் காவல்துறை: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதான வழக்கை வாபஸ் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையின் முன்னர் சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் இந்த மாணவியுடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து அந்த மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அந்த மாணவி ஜாமினில் வெளியே வந்தாலும் இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஆய்வாளர் சம்மன் அனுப்பியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்யத் தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல் துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக் கோரி சம்மன் அனுப்பி மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது என்றார்.
மற்றொரு பதிவில், மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினைத் தொடர, தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். பொது வாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.