தமிழ்நாடு
மீடியாக்களை கோழைத்தனத்தோடு முதல்வர் மிரட்டுகிறார்: ஸ்டாலின் பாய்ச்சல்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை பழியை சுமத்தியுள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நிலவி வருகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கொடநாடு கொலை குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்களை முதல்வர் மிரட்டுவதாகவும். இது கோழைத்தனம் எனவும் சாடியுள்ளார் ஸ்டாலின். தனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, இது தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கோழைத்தனத்தோடு ஒரு முதல்வர் மிரட்டுகிறார். தொலைக்காட்சி சேனல்களின் கேபிள் வயர்களை துண்டிப்பதாக வேறு தகவல்கள் வருகின்றன. இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? யோக்கியர் என்றால் எதற்காக பயப்பட வேண்டும்? என ஸ்டாலின் கடுமையான வார்த்தைகளை முதல்வருக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார்.