தமிழ்நாடு
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000: கமல்ஹாசனை பார்த்து காப்பி அடித்தாரா ஸ்டாலின்?
![kamal campaign20 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/kamal-campaign20.jpg)
திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான திமுக மாநாட்டில் 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். மேலும் அவர் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கூறியபோது, ‘தன்னுடைய திட்டங்களை காப்பி எடுத்து திமுக அறிவிப்பதாக நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.
நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை துறைமுகம் அருகே உள்ள மின்ட் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள்தான் டயலாக் சொல்லிக் கொடுத்திருக்கிறோம் போல் தெரிகிறது. அவர் வரிசையாக எங்களது திட்டங்களை காப்பியடித்து அறிவித்து வருகிறார்.
இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவோம் என்று முதல் முதலில் அறிவித்தது நாங்கள்தான். திமுக அதனை கொஞ்சம் மாற்றி ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஸ்டாலின் கூறிய ஏழு உறுதிமொழி உட்பட அனைத்துமே நாங்கள் ஏற்கனவே கூறியதுதான். எனவே மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று துண்டு சீட்டாக மாறி ஸ்டாலின் கைகளில் இருந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.