தமிழ்நாடு
தன்னிலை மறந்து ஆணவமாக பேசும் ஸ்டாலினுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்: அதிமுக ஆலோசனை!
தங்க தமிழ்செல்வன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அங்கு இருப்பது நியாயமல்ல உங்களுடைய இயக்கம் உங்களின் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் தான் நான் அவர்களையும் வருக, வருக, வருக என வரவேற்க விரும்புகின்றேன் என்றார்.
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்கனவே பதிலடி கொடுத்துள்ள நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வேலூர் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆவேசமாக பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அவருக்கு எவ்வளவு ஆணவம். தன்னிலை மறக்கும்போதுதான் இந்த ஆணவம் வரும். ஸ்டாலின் தன்னிலை மறந்திருக்கிறார். அவருக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய தேர்தலாக இந்த வேலூர் தேர்தல் அமைய வேண்டும் என்று கூறினார்.