கிரிக்கெட்
எங்களுக்கு மட்டும் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது: இலங்கை அணி பரபரப்பு குற்றச்சாட்டு!
![Sri Lanka Wc - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Sri-Lanka-Wc.jpg)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணிக்கு மட்டும் க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என இலங்கை அணியின் மேனேஜர் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை புற்கள் நிறைந்த க்ரீன் பிட்சில் எதிர்கொண்ட இலங்கை அணி படுதோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் உடன் மழையால் டெக்வெர்த் லீவீஸ் விதிப்படி போராடி வென்றது.
மற்ற இரண்டு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டது. இந்த ஆடுகளங்களும் பந்துவீச்சிற்கு சாதகமாக புற்கள் நிறைந்ததாகவே காணப்பட்டதாக இலங்கை குற்றச்சாட்டை வைக்கிறது. இந்நிலையில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது. இது தொடர்பாக பேசிய இலங்கை அணியின் மேனேஜர் அஷாந்தா டி மெல், லண்டன் ஓவலில் 300 ரன்களுக்கு மேல் எளிதாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுவது போல் தெரிகிறது. இதனால் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது.
நாங்கள் விளையாடிய நான்கு போட்டிக்கான ஆடுகளங்களும் புற்கள் நிறைந்து காணப்பட்டது. ஐசிசி எங்களுக்காக க்ரீன் பிட்ச் தயார் செய்துள்ளது. கடந்த நான்கு போட்டிகளும் இதைத்தான் காட்டுகிறது. அதே மைதானத்தில் மற்ற அணிகள் மோதும் பிட்ச் புற்கள் காய்ந்து, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான பிட்ச் க்ரீனாக உள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளிக்கிறோம். ஐசிசி நடத்தும் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஆடுகளமும், மற்ற அணிகளுக்கு வேறுவிதமான ஆடுகளங்களும் தயார் செய்யப்படுவது நியாயமானது அல்ல.
கார்டிப் போட்டிக்கான பயிற்சியின்போது மூன்று வலைகளுக்குப் பதிலாக இரண்டு வலைகள் மட்டுமே தயார் செய்து தந்தனர். நாங்கள் தங்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலாக்ஸ் ஆக நீச்சல் குளம் ஒவ்வொரு அணிகளுக்கும் தேவை இவ்வாறு கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் இலங்கை அணியின் மேனேஜர். ஆனால் இதனை ஐசிசி தரப்பு மறுத்துள்ளது.