தமிழ்நாடு
பரவும் H3N2 இன்புளூயன்சா: தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!
தமிழகத்தில் பரவி வரும் H3N2 இன்புளூயன்சா வகை காய்ச்சலால் உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் பரவலாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சலால் இந்தியாவில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் உயிரிழப்பு உறுதியாகியுள்ளது.
H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக இது பரவி வருகிறது. இது வைரஸ் என்பதால் ஆண்டிபயாடிக் இதற்கு எதிராக வேலை செய்யாது. அதே நேரம் இது கொரோனாவும் கிடையாது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.
H3N2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கொரோனாவை போல் வேகமாக பரவும் இந்த H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், H3N2 இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதி திருச்சியில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தார். அவருக்கு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் உயிரிழந்த இளைஞருக்கு H3N2 இன்புளூயன்சா வைரஸ் பரவியது உறுதியாகியுள்ளது. இது தமிழகந்த்தின் முதல் உயிரிழப்பு ஆகும். தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.