தமிழ்நாடு
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவெனில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச பழக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் சாதாரணமாகவே ஆங்கிலம் பேச திணறுவார்கள் என்பதும்தான் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும், ஏன் உலகமுழுவதும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் இன்றியமையாதது என்பதால் ஆங்கில அறிவுக்காகவே பலர் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதை அடுத்து மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனையடுத்து தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் படிக்கும் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு தினமும் அரைமணிநேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்படுவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு விட்டால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.