சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ படத்துக்காக இந்த நேரங்களில் சிறப்புக் காட்சிகள் – வசூலை அள்ள புதிய திட்டம்!
தளபதி விஜய் நடிப்பில், நாளை மறுநாள் பொங்கல் விழாவை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ‘மாஸ்டர்’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே மாஸ்டரின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரிலீஸாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாஸ்டர் ரிலீஸ் தேதி, ஜனவரி 12 என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஏதுவாக தமிழக அரசும் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ள அனுமதி கொடுத்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அந்த உத்தவரவைத் திரும்ப பெற்றது அரசு. தற்போது மீண்டும், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பி காட்சிகள் காட்ட திரையரங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள், முதல் வார வசூலை வேறு வழியில் ஈட்ட புதிய திட்டம் போட்டுள்ளனர். அதன்படி ஜனவரி 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது.
இதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் வசூலையும் அள்ளி, ரசிகர்களையும் திருப்திபடுத்த முடியும் என்று கருதப்படுகிறது. சிறப்புக் காட்சிகள் மூலம் முதல் வாரத்தில் மாஸ்டர், 6 அல்லது 7 காட்சிகள் ஓட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.