தமிழ்நாடு

செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு கவுண்டர்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க பெற்றோர் விரும்பினால் அதற்கு சரியான திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு சேமிக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்காக அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, தமிழக அரசு பல்வேறுசமுக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில், “செல்வமகள் சேமிப்பு திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இதில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250, அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வைப்பு தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம்.

முதிர்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின்போதோ அல்லது 21 வயது நிறைவடையும் போதோ பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரிவிலக்கு உண்டு.

மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோர்களின் வசதிக்காக, சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் சிறப்புக் கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Trending

Exit mobile version