சினிமா செய்திகள்

எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணம் சர்ச்சை.. பேஸ்புக்கில் வீடியோ போட்ட சரண்!

Published

on

எஸ்பிபி மருத்துவக் கட்டணம் குறித்து இணையத்தில் வெளியான சர்ச்சை தகவல் குறித்து, எஸ்பிபி மகன் சரண் பேஸ்புக்கில் காட்டமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், காந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எஸ்பிபி உடல் நலம் எப்படி உள்ளது என்று அவ்வப்போது சரண் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்துவந்தார்.

உடல் நலம் மோசம் அடைந்த போது திரைத்துறையினர், எஸ்பிபி ரசிகர்கள் என அனைவரும், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டனர். பின்னர் எஸ்பிபி உடல் நிலை சீரானதாகவும், அவரே கட்டை விரலைத் தூக்கிக் காட்டுவதும் போன்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

ஆனால், ஒன்றை மாதம் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, செப்டம்பர் 24-ம் தேதி எஸ்பிபி பிற்பகல் ஒரு மணியளவில் எஸ்பிபி காலமானார். இந்நிலையில் எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அதற்கான கட்டணத்தை, அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் போனது. எனவே தமிழக அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் மறுக்கக் குடியரசுத் தலைவர் எஸ்பிபி மருத்துவ கட்டணத்தைச் செலுத்த உதவியதாகவும், அதுவரை எஸ்பிபியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் அளிக்க மறுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் அந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த எஸ்.பி.பி.சரண், “எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும், என் அப்பா சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலாவுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே சில விசயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்பா ஆகஸ்ட் 5-ம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்று வதந்தி ஒன்று உலாவி வருகிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காக உதவி கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும், அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் செய்தி உலாவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தைச் செலுத்தும் வரை எம்ஜிஎம் மருத்துவமனை எஸ்பிபி உடலை அளிக்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

எனவே இப்போது ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவை அனைத்தும் சுத்தப் பொய். ஏன் இப்படி செய்தி பரப்புகிறார்கள் என தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்களை இது எப்படி பாதிக்கும் என்று புரியாமல் செய்துகொண்டு உள்ளார்கள். இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது. இப்படி வதந்திகளைப் பரப்பியவர்கள் எஸ்பிபி ரசிகர்களாக இருக்க முடியாது. அவரது ரசிகர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளை எஸ்பிபி மன்னிப்பார். நானும் மன்னிக்கிறேன். ஆனால் இதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்தவர் முதிர்ச்சியடைய வேண்டும். ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பக்கூடாது.

என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எவ்வளவு கட்டணம் என்று எதுவும் அவருக்குத் திரியாது. நான் இப்போது அதுபற்றி சொல்லப்போவதில்லை. எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகமும் நானும் இணைந்து கட்டணம் குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடுவோம். இது தேவையில்லாத ஒன்று. ஆனால் இதை நாங்கள் செய்ய வேண்டி உள்ளது. எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு இருக்கும் மனவலிக்கு நடுவில் உடனடியாக, பத்திரிக்கையாளர்களை ஒன்று கூட்டிப் பேசுவதெல்லாம் எப்படி முடியும்.

மருத்துவமனையில் அப்பாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்களுடனான சந்திப்புகள் மனதில் நினைவலைகளாக உள்ளன. சிகிச்சையின் போது அப்பலோ மருத்துவமனையிலிருந்து கருவி தேவைப்படும் போது, அவர்கள் அதை அளித்து உதவினார்கள். அனைவரும் சிறந்தவர்கள். இந்த செய்தியைப் பரப்பியவரும் சிறந்தவராக மாற வேண்டும். விரைவில் மருத்துவ கட்டணம் குறித்த அறிக்கையை வெளியிடுவேன்.” என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version