தமிழ்நாடு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை அறிவிப்பு
கேரளாவில் இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி வரும் நிலையில் இந்த வருடம் மட்டும் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இலங்கையிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.