இந்தியா
இந்திய நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை திருப்பி அனுப்பும் தென் ஆப்ரிக்கா.. ஷாக் காரணம்
பெங்களூரு: இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அனுப்பிய 10 லட்சம் கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா கூறியுள்ளது. அங்கு பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக இது பெரிய அளவில் செயல்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இப்போது தான் உலகம் மீண்டு வர தொடங்கியுள்ளது.பல மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கி வருகின்றன. இருப்பினும் தடுப்பூசிக்கு எதிராகவும் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை இரண்டு வகையான தடுப்பூசிகளை அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்து இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோஷீல்டு தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Also Read: இந்தியாவில் முதல் ஸ்டெதாஸ்கோப் ஸ்டெர்லைசர்.. நோய் பரவலை தடுக்க Xech நிறுவனத்தின் கண்டுபிடிப்பு
இதேபோல் உலகம் முழுவதிலும், ஃபைசர், சினோபார்ம், மற்றும் ஆக்ஸ்போர்ட் தயாரித்த தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கிடையே பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகவும் முன்பை விட வீரியமாகவும் பரவி வருவதால் அதற்கு எதிராகவும் இந்த தடுப்பூசிகள் செயல்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதில் பிரிட்டன் வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி ஓரளவுக்கு செயல்படும் என ஆக்ஸ்போர்ட் அறிவித்தது. இதனால் அதையே தங்கள் நாட்டுக்கும் கொடுக்க தென் ஆப்ரிக்கா முடிவு செய்து இந்திய நிறுவனத்திடம் ஆர்டர் வழங்கப்பட்டன. அதன்படி கடந்த வாரம் முதல் கட்டமாக 10 லட்சம் கொரோனா தடுப்பூசிக்கான டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மீதம் 5 லட்சம் அடுத்த வாரம் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே தான் இந்த தடுப்பூசிகளை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா கூறியுள்ளது. மேலும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ஆக்ஸ்போர்ட் தயாரித்த தடுப்பூசியை வழங்குவதையும் நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள தென் ஆப்ரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அரசாங்கம் மீண்டும் விற்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
அந்நாட்டில் பரவி வரும் புதிய 501Y.V2 வகை கொரோனா வைரசுக்கு எதிராக மிக குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே வழங்குவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவியவந்துள்ளது.தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் இந்த தடுப்பூசி மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை மட்டுமே அளிப்பதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தென் ஆப்ரிக்காவில் தொடங்க உள்ள தடுப்பூசி போடும் பணிகளுக்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளதால் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.