சினிமா செய்திகள்
ரஜினி குரலில் நாளை வெளியாகும் புதிய செயலி: அறிக்கை வெளியீடு!
![soundarya-rajinikanth-family-1542244526 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/soundarya-rajinikanth-family-1542244526.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் நாளை முதல் புதிய செயலி ஒன்றை வெளியிட இருப்பதாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா என்பதும் அவர் சமீபத்தில் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சௌந்தர்யா விசாகன் கடந்த சில மாதங்களாக ‘HOOTE” என்ற செயலியை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘HOOTE” என்ற செயலி நாளை முதல் வெளியாக இருப்பதாக ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றது. ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.
இரண்டாவது என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ‘HOOTE” என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்கள் எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ‘HOOTE” செயலி மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியாக ‘HOOTE” செயலியை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.