வணிகம்
விரைவில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி!
ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது.
மேலும் அதிக மதிப்பிலான தொகையை ஏடிஎம் மையங்களிலிருந்து எடுக்கும் போது ஆதார் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இது வரி தாக்கல் செய்யும் போது அவற்றை டிராக் செய்ய உதவும். ஆதார் சரிபார்ப்பு முறையில் தனிநபர் அடையாள் எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் பயன்படுத்தப்படும் என்பதால் மோசடியில் ஈடுபட முடியாது.
வங்கிக் கணக்குகளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது பான் எண்ணிற்குப் பதிலாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்க வாய்ப்புள்ளது.
இது குறித்த அறிவிப்புகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005 முதல் 2009-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வங்கிகளில் செய்யும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. அந்த வரியை மீண்டும் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது போன்ற வரியை விதிக்கும் திட்டத்தில் அரசு உள்ளதால் தான் ஜூன்6-ம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட நாணய கொள்கை கூட்டத்தின் போது NEFT மற்றும் RTGS கட்டணங்களை நீக்க முடிவு செய்ததற்கான காரணம் என்றும் கூறுகின்றனர்.
புதியதாகப் பதவிக்கு வந்துள்ள அரசுக்கு வரி சீர்திருத்தங்கள் செய்வது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிக வரி செலுத்தும் நபர்களுக்குப் பிரதமர் மோடியுடன் டீ-பார்ட்டி நடைபெறும் என்றும் வெகுமதிகள் வழங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.