தமிழ்நாடு
இந்த அத்தி வரதர் யார் என்று தெரியுமா? சில சுவாரஸ்ய தகவல்கள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் அத்தி வரதர் யார் என்பதை விளக்கியுள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர்.
அத்தி வரதர் தன்னை மீண்டும் சேற்றில் புதைக்க வேண்டாம் என ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா சுவாமிகளிடம் கனவில் வந்து அழுததாக கூறிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் அத்தி வரதரை மீண்டும் புதைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் இந்த அத்தி வரதர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, அத்திவரதர் 48 வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் மேலே எழுந்திருக்கிறார். இது ஆகமத்திலோ, சாஸ்திரங்களிலோ கிடையாது. இந்த அத்திவரதர்தான், ஆதிகாலத்தில் ஆதிசங்கரருடன் பேசியிருக்கிறார். இதே மூர்த்திதான் ராமானுஜருடன் பேசியிருக்கிறார். தேசிகரிடமும் பேசியிருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில், திருட்டு பயம் இருந்தது.
விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், இந்த அத்திவரதரைக்கூட கீழே பூமியில் புதைத்து மறைத்து வைத்துள்ளார்கள். இப்போது நமக்கு அந்த பயம் இல்லை. இந்த மூர்த்தி மிகவும் பேசும் மூர்த்தி. அதனால், கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதற்கு வந்துகொண்டே இருப்பார்கள். எனவே அவரைப் பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை வைத்துள்ளார்.