தமிழ்நாடு
சிவசங்கர் பாபா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.
இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென சிவசங்கர் பாபாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அழைக்கப்பட்டார் என்பது பின்னர் டிஸ்சார்ஜ் ஆன பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தற்போது அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட ஒரு சில வாரங்களில் இரண்டு முறை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.