சினிமா செய்திகள்
ரூ.4 கோடி சம்பள பாக்கி: சிம்பு, விக்ரம் படங்களுக்கு எதிராக சிவகார்த்திகேயன் வழக்கு!
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு நான்கு கோடி ரூபாய் சம்பள பாக்கி தர வேண்டி இருப்பதால் அவர் வினியோகம் செய்யும் விக்ரம் மற்றும் சிம்பு படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு பதிவு செய்துள்ளார் .
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’மிஸ்டர் லோக்கல்’. இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக ரூபாய் 15 கோடி பேசப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்ததாகவும் நான்கு கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது .
இந்த சம்பள பாக்கியை சிவகார்த்திகேயன் பலமுறை தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவர் தராததால் தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்று தரும்படி சிவகார்த்திகேயன் பதிவு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 31ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விநியோகம் செய்யும் சிம்பு மற்றும் விக்ரம் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளதால் மார்ச் 31-ஆம் தேதி விசாரணையின் போது இது குறித்த உத்தரவு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.