தமிழ்நாடு
கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாய இருக்கை: சட்டசபையில் சட்டத்திருத்தம்!
தமிழகத்தில் இனி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றும் வகையில் கட்டாய இருக்கை வசதி செய்யும் சட்டத்திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரியும் நிலை தற்போது உள்ளது. இதனை அடுத்து கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றும் சட்டத்திருத்தம் என்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் அவர்கள் இந்த சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இனி தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் நின்றுகொண்டு பணிபுரிய வேண்டிய அவசியம் இருக்காது என்பதும் இருக்கையில் அமர்ந்து பணிபுரியலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டே பணி செய்து வருகின்றனர். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொழிலாளர்கடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தருவது கட்டாயம் என்றும் தொழிலாளர்கள் நலத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை தற்போது பரிசீலிக்கப்பட்டு இதற்கான சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் கடைகளில் பணிபுரியும் லட்சக் கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்ட மசோதா செப்டம்பர் 13-ஆம் தேதி வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதே போன்ற சட்டம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.