இந்தியா
கஃபே காஃபிடே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் ஆற்றில் கண்டெடுப்பு!
கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காஃபிடே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த்தா திடீரென மாயமான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 29-ஆம் தேதி மங்களூரு அருகே காரில் சென்று கொண்டிருந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா திடீரென காரை டிரைவரிடம் நிறுத்த சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என கூறிவிட்டு காரை விட்டு இறங்கி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சித்தார்த்தா வராததால் பதற்றமடைந்த டிரைவர் சித்தார்த்தாவின் வீட்டுக்கு போன் செய்து தகவல் கூறியுள்ளார். சித்தார்த்தாவின் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அவரை தேடும் பணி தீவிரமானது.
இந்நிலையில் சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதை மீனவர் ஒருவர் பார்த்ததாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆற்றில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் நேத்ராவதி ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.