இந்தியா
பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது கீழ்த்தரமான செயல்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்புகள் இங்கு எழுகின்றன. கறுப்புக்கொடி காட்டுவது, கோ பேக் மோடி என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்குவது என மோடிக்கு எதிராக தமிழகம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு கறுப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான செயல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் நன்மை செய்ய வேண்டுமென நினைப்பவர் பிரதமர் மோடி. அனைத்து மாவட்டங்களும் முன்னேற அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பிரதமர் தமிழகத்துக்கு வரும்போது கறுப்புக் கொடி காட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயல் என ஆவேசமாக பேசினார்.
வரும் 10-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து திருப்பூருக்கு வருகை தர உள்ள பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட உள்ளனர்.