தமிழ்நாடு
நாளை நீட் தேர்வு.. இன்று மாணவி தற்கொலை.. தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19 வயது மகள் மாணவி ஜோதி துர்கா. சென்ற ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த ஜோதி துர்கா ஒரு ஆண்டாக நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அவரது குடும்பத்தினரையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியடை செய்துள்ளது.
தற்கொலைக்கு முன்பு, கடிதம் மற்றும் ஆடியோ மூலமாக அதுபற்றி தெரிவித்து இருந்த ஜோதி துர்கா, என்னுடைய தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை. நான் நன்றாகத் தான் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்தேன்.
எனது பெற்றோர் எனக்கு முழு சுதந்திரமும் வழங்கி இருந்தனர். எனக்கு அவர்கள் கண்டிப்பாக பாஸாக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆனால், பாஸ் ஆக முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.