கிரிக்கெட்

‘சின்ன பசங்கதான்… ஆனா, தெறிக்க விட்டுட்டாங்க!’- இந்திய அணியை புகழ்ந்து தள்ளும் சோயப் அக்தர்

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா மதிக்கத்தக்க ஸ்கோரான 336ஐ அடைந்தது. தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா, 250 ரன்களைக் கூட தாண்டாது என்று அஞ்சப்பட்ட நிலையில் இப்படியான அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஷ்ராதுல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அசத்தல் அரைசதங்கள்தான். இந்திய அணியின் பேட்டிங்கையும், அணியின் போர்க் குணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இன்றைய ஆட்டத்தை 2 விக்கெட்டுகள் இழந்து 62 ரன்களுடன் ஆரம்பித்தது. 3வது நாள் ஆட்டத்தை செத்தேஷ்வர் புஜாராவும், அஜிங்கியே ரஹானேவும் மீண்டும் ஆரம்பித்தனர். இருவரும் முறையே 25 மற்றும் 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த மயான்க் அகர்வாலும் 38 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், அதிரடியாக விளையாடினாலும் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். அவருடன் ஷ்ராதுல் தாக்கூரும் ஈடு கொடுத்தார். ஒரு கட்டத்தில் தாக்கூர் மளமளவென ரன் குவித்து, அரைசதம் எட்டினார். அவர் 67 ரன்களுக்கு அவுட்டாக சுந்தர், தொடர்ந்து களத்தில் இருந்தார். அவர் கடைசியாக 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இந்திய இன்னிங்ஸும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 336 ரன்களோடு தனது முதல் இன்னிங்ஸை இந்தியா முடித்துக் கொண்டது.

வெறும் 33 ரன்கள் லீடிங் உடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அந்த அணி ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் விளையாடி வருகிறது.

இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே ஆட்டம் பாக்கியிருப்பதால், இந்தப் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி, தனது மூத்த மற்றும் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது. குறிப்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா என முக்கிய வீரர்கள் இல்லாமல் களம் கண்டது. இந்தப் போட்டியில் மட்டும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுகம் ஆயினர். இந்த ஆஸ்திரேலிய தொடரில்தான் பவுலர் முகமது சிராஜும் அறிமுகம் ஆனார். இப்படி அனுபவமற்ற அணியை வைத்துக் கொண்டு இந்தியா, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று, மூன்றாவது போட்டியை டிரா செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த போராட்ட குணத்தைக் கண்டு வியந்து பேசியுள்ள அக்தர், ‘பல வீரர்களை காயத்தால் இழந்த பின்னரும், குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்திய அணி பிராமாதமாக ஆடி வருகிறது. இதுதான் இந்தியாவின் அழகே.

இந்த இளம் அணி, முழு பலம் கொண்ட ஆஸ்திரேலிய அணியை சமாளித்து ஆடுவது மிகவும் ஆச்சரியம் அளிக்கின்றது. ஆஸ்திரேலிய அணியை முழு முயற்சி கொண்டு எதிர் கொள்வது என்று இந்தியா முடிவு செய்துவிட்டது. இந்த அணியின் கேரக்டரைப் பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டேன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

3வது டெஸ்டின் மூன்றாவது நாள் ஹைலைட்ஸ்:

Trending

Exit mobile version