இந்தியா
கேள்வி கேட்பவர்களை தேச விரோதிகள் என்பது தவறு: பாஜகவை விளாசிய சிவசேனா!
வர உள்ள மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 20-ஆம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில் தேசப்பற்று விவகாரத்தில் பாஜகவின் அனுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளது சிவசேனா.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையையான சாமனாவில், எதிர்க்கட்சிகள் பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரங்களை கேட்பது எப்படி தவறோ, அதேபோல அரசியல் பிரச்சார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துவதும் ராணுவ வீரர்கள் உடைகளைப் பயன்படுத்துவதும் தவறு. பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி ராணுவ உடையில் பாஜக பிரச்சாரத்தில் பங்கேற்றது மோசமான அரசியல். இது கண்டிக்கத்தக்கது.
வீரர்கள் மிகக் கடினமான பயிற்சி பெற்று விமானப் படையிலும், ராணுவத்திலும், கப்பற்படையிலும் சேருகின்றனர். அவர்கள் நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்கின்றனர். ஆனால் நாட்டுப்பற்று என்பது தனிப்பட்ட ஒரு கட்சியாலோ அல்லது ஒரு தலைவராலோ பாதுகாப்பது அல்ல. அப்படி யாரேனும் நினைத்தால் அது மக்களை இழிவுபடுத்துவதாகும். அரசியல் கருத்துகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்பவர்களை தேச விரோதிகளாக அடையாளப்படுத்துவது தவறு என பாஜகவை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.