உலகம்
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்: நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன?
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட சம்பவம் உலகிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் 193 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த கால்வாய் சரக்கு கப்பல்களில் பயணத்தை 7000 கிலோ மீட்டர் வரை குறைக்கின்றது.
இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களை இணைக்கின்றது என்பதும், சூயஸ் கால்வாயை கட்டுவதற்கு முன்னர் ஆப்ப்ரிக்காவை சுற்றியே கப்பல்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது என்பதும் இந்த கால்வாய் கட்டிய பிறகு அனைத்து கப்பல்களும் இந்த கால்வாய் மூலம் செல்வதால் ஏராளமான நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக வர்த்தகத்தின் 12% இந்த சூயஸ் கால்வாய் வழியே நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த கால்வாயை பயன்படுத்த ஒரு கப்பலுக்கு 36 லட்சம் முதல் 300 கோடி வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி எவர்கிரீன் கப்பல் இந்த கால்வாயில் சிக்கிக்கொண்டதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது
எவர்கிரீன் கப்பலின் நீளம் 400 மீட்டர் என்பதும் உயரம் 59 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பல் கால்வாய் சிக்கிய நாளன்று மணல் புயல் வீசியது என்றும், இதனால் மாலுமிகள் சரியாக கால்வாய் வழியை பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த கப்பல் தற்போது மணலில் சிக்கிக் கொண்டதால் சுமார் 250 கப்பல்கள் பின்னால் காத்திருக்கின்றன என்பதும் இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாட்கள் இதே நிலை நீடித்தால் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் என்றும் குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை அதிகம் ஏறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டிலிருந்து நிபுணர்குழு சுயஸ் கால்வாயை விரைந்து உள்ளதாகவும் விரைவில் இந்த கப்பல் மீட்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.